UPDATED : ஆக 06, 2026 10:14 AM
ADDED : ஆக 06, 2026 10:16 AM

பீஜிங்:
சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தின் ஆய்வகத்தில் நெல் விளைவித்து சாதனை படைத்துள்ளது. இதன் வாயிலாக நிலா, செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளின் போது, உணவுக்காக பூமியை மட்டும் நம்பியிருக்காமல், அங்கேயே உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
கடந்த மே 24ம் தேதி சென்ஜூ - 23 திட்டம் வாயிலாக, தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு சீன விஞ்ஞானிகள் விதை நெல் கொண்டு சென்றனர். சுமார் இரண்டு மாதங்கள் விண்வெளியில் நெல் விளைச்சல் செய்துள்ளனர். அதனை அடுத்த கட்ட ஆய்வுக்காக சேகரித்துவைத்துள்ளனர்.
இதற்கு முன்னர், 2022ம் ஆண்டு, தியாங்காங் விண்வெளி நிலையத்தில் முதல்முறையாக நெல் விளைச்சல் செய்திருந்தனர். தற்போது அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து விளைச்சலில் ஈடுபட்டுள்ளனர். 2022ம் ஆண்டு ஆறு விதை நெல், 120 நாட்கள், சுற்றுவட்டப் பாதையில் வைக்கப்பட்டு விளைவிக்கப்பட்டு பூமிக்கு ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது, விஞ்ஞானிகள், அதில் கிடைத்த நெல் மற்றும் விண்வெளிக்கு செல்லாத நெல் வாயிலாக விளைவித்துள்ளனர். விண்வெளியில் ஆய்வின் போது உணவுப் பொருட்களை அங்கேயே உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கிடைத்த முடிவுகள் வாயிலாக, எதிர்காலத்தில் ஆய்வுகளின் போது, உணவுக்கு பூமியை மட்டும் நம்பியிருக்காமல் விண்வெளியில் அதனை உற்பத்தி செய்யும் நிலை உருவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாய், நிலா உள்ளிட்ட கிரகங்களில் குடியேறும் போது அங்கு உணவு தேவைக்கு என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சீன விஞ்ஞானிகளின் சாதனை பதிலாக அமைந்துள்ளது.
