சர்வதேச புலிகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM
ADDED : ஜூலை 30, 2025 08:40 AM

வால்பாறை:
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, பழங்குடியின மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது.
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் ஆண்டு தோறும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, வால்பாறை கக்கன்காலனி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது.
வனச்சரக அலுவலர்கள் சுரேஷ்கிருஷ்ணா, கிரிதரன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டனர்.
வனத்துறை அதிகாரிகள் பேசியதாவது:
புலிகளை பாதுகாத்தால் தான் புவியை காக்க முடியும். காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எஸ்டேட் பகுதியில் வசிப்பவர்கள் மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வனவிலங்குகள் குறித்த பாடபுத்தகங்களை மாணவர்கள் அதிக அளவில் அறிய நிறைய நுால்களை படிக்க வேண்டும். இயற்கையையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.
இவ்வாறு, பேசினர்.
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகோபால் மற்றும் ஆசிரியர்கள், வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

