UPDATED : ஆக 29, 2026 01:14 AM
ADDED : ஆக 29, 2026 01:14 PM
புதுச்சேரி:
முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆளுமை பயிற்சி முகாம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழாசிரியை விஜயா வரவேற்றார். தலைமையாசிரியை சுபாங்கி முன்னிலை வகித்தார்.
மாநில சட்ட உதவிகள் ஆணைய செயலர் நீதிபதி ரமேஷ் முகாமை துவக்கி வைத்து, இந்திய அரசியலமைப்பு, விடுதலைப் போராட்ட வரலாறு, நாட்டுப் பற்று, மனித உரிமைகள், கல்வியின் முக்கியத்துவம், நாளேடுகள் வாசிப்பு, பதின் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், போட்டித் தேர்வுகளை எழுதும் முறைகள் மற்றும் சுற்றுப் புற சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினார்.
எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, உயர் கல்வியின் முக்கியத்துவம், தனி மனித் திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் முறைகள், பேச்சாற்றல், படைப்பாற்றல், நேர்முகத் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ளும் முறைகள், மது, போதை, திரைக்கவர்ச்சி மற்றும் சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச் சிதறல்கள் மற்றும் பெருகி வரும் குற்றங்கள் குறித்து பேசினார்.
கலந்துரையாடல்
நிகழ்ச்சியில், மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன், இலவச சட்ட உதவிகள் ஆணைய உதவியாளர் சிவா ஆகியோர் செய்திருந்தனர். விரிவுரையாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.
