UPDATED : மே 28, 2025 12:00 AM
ADDED : மே 28, 2025 10:17 AM
 ராமநாதபுரம்:
 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 50 சதவீதம் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர் என்ற தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சோழந்துாரை சேர்ந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் மணி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கையில் தினமலர் நாளிதழிலில் வெளியான அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 50 சதவீதம் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்த செய்தி மற்றும் பாதகையுடன் மனு அளிக்க வந்தார்.
அவர் கூறுகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்கள் இல்லாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக டாக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.

