UPDATED : பிப் 21, 2026 03:12 PM
ADDED : பிப் 21, 2026 03:13 PM
ராமநாதபுரம்:
வரும் மார்ச் 2ல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2ல் 14,626 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 67 மையங்களில் முன்னேற்பாடுகள் நடக்கிறது. 67 முதன்மை கண்காணிப்பாளர்கள் அடங்கிய நிலைத்த படை அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் துவங்கி 26 வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் - 70, உதவி பெறும் பள்ளிகள் - 37, தனியார் பள்ளிகள் - 52, மாதிரி பள்ளி - 1 என 160 மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் 127 பேர் மற்றும் 7527 மாணவிகள் உட்பட 14,626 பேர் பிளஸ் 2ல் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இவற்றிற்கான வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, பேரையூர் ஆகிய இடங்களில் ஜன்னல் இல்லாத, ஒருவழி பாதை மட்டும் உள்ள அறையில் வைக்கப்பட உள்ளன. 67 முதன்மை கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் நிலைத்த படை அமைக்கப்படுகிறது.
இது போக வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொதுத்தேர்வு நடைபெறும் 67 மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் வைத்துள்ள இடங்களில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. வினாத்தாளை படிக்க முதல் 10 நிமிடங்கள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளான மூளை வளர்ச்சி குன்றிய மாணவருக்கு மட்டும் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். பிளஸ் 1 தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை மதியத்திற்கு மேல் நடைபெற உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

