UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:42 AM
புதுடில்லி:
ஆன்லைன் கேம்களை விளையாடி, அதன் வாயிலாக பிரபலமடைந்தவர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நம் நாட்டில், ஆன்லைன் கேமிங் எனப்படும் வீடியோ கேம் துறைக்கான எதிர்காலம் மற்றும் அத்துறையில் உள்ள சவால்கள் குறித்து, பிரதமர் மோடி, பிரபல கேமர்களுடன் கலந்துரையாடினார். மேலும், அவர்களுடன் இணைந்து சில வீடியோ கேம்களை விளையாடி பார்த்தார்.
இந்த பிரபலங்களை சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பின் தொடர்கின்றனர். இதில் பங்கேற்ற இளைஞர்கள், கேமிங் துறையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி, அதில் பெண்களின் பங்கேற்பு, விளையாட்டு தொடர்பான பிரச்னைகள் குறித்து பிரதமருடன் விவாதித்தனர்.
பதிலுக்கு அவர், கேமிங் துறையை ஊக்குவிப்பதன் வாயிலாக, கேமர்களின் படைப்பாற்றலை அரசு எவ்வாறு அங்கீகரித்துள்ளது என்பது பற்றி கூறினார்.
பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:
வன்முறைக்கு பதிலாக நல்ல விஷயங்களை கற்றுத் தரும் விளையாட்டுகளை வடிவமைக்க வேண்டும். உதாரணமாக சுற்றுப்புற துாய்மையை கருப்பொருளாக வைத்து விளையாட்டுகளை வடிவமைக்க வேண்டும்.
இதை குழந்தைகள் விளையாடும்போது நிஜ உலகிலும், அதை பொருத்திப் பார்ப்பர். இவ்வாறு அவர் கூறினார்.