UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM
ADDED : ஜூலை 19, 2025 09:01 AM
சிவகங்கை:
வகுப்பறையில் அரசியல் பேசுவதாக புகார் கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கணேசன் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கணேசன் வகுப்பறையில் அரசியல் பேசுகிறார். தங்களிடம் கடுமையாக நடக்கிறார் என புகார் கூறி அவரை மாற்ற வலியுறுத்தி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பெற்றோர் சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து பேசினார்.
ஆனால் ஆசிரியர் கணேசனை மாற்றாதவரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம். இல்லையெனில் மாற்று சான்றிதழை வழங்குமாறு கூறினர். இதனை தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை நடந்தது. பெற்றோரும் புகார் எழுதி தந்தனர். கணேசனை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்தார். அவரை சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார். நேற்று சொக்கநாதபுரம் பள்ளியில் ஆர்.டி.ஓ., விஜயகுமார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்தார்.