UPDATED : ஏப் 27, 2026 06:27 PM
ADDED : ஏப் 27, 2026 06:30 PM
சென்னை:
“செயற்கை தொழில்நுட்பம் நமக்கு சேவகனாக மட்டுமே இருக்க வேண்டும். அதை ஆளும் திறன் நாமாக இருக்க வேண்டும்,” என, பிரின்ஸ் வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.
கவுரிவாக்கம், பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 25வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில், படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
நாம் படித்து வசதி, வாய்ப்பை பெருக்கிக் கொள்வது மட்டும் வாழ்க்கை இல்லை. நாம் மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்; மற்றவர்களுக்கு பயனற்ற வாழ்க்கை வாழ வேண்டாம்.
தற்போது, ஏ.ஐ., எனும் செயற்கை தொழில்நுட்பம் நமக்கு புதுமையான சவால் விடுகிறது. மனிதன் கருவிகளை கண்டுபிடித்தான். ஆனால், இந்த ஏ.ஐ., சொல்லாததையும் செயல்படுத்தும் திறன் கொண்டது.
மனிதன் உலகை ஆளவும், அது தழைக்கவும் நம்பிக்கை ஒன்றுதான் காரணம். நாம், 'வாட்ஸாப், சாட் ஜி.பி.டி., ஜெமினி' ஆகியவற்றை நம்புகிறோம். அது தவறு. நீங்கள் எவ்வளவு படித்தாலும் அனுபவம் தான் முக்கியம்.
நாம் எப்போதும், மனிதன் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது. அனைவரும் பெரும்பாலான நேரம் மொபைல் போனில் மூழ்கி இருக்கிறீர்கள். ஏ.ஐ., நமக்கு சேவகனாக மட்டுமே இருக்க வேண்டும். அதனை ஆளும் திறன் நாமாக இருக்க வேண்டும்.
சந்தோஷம், நிம்மதி இல்லாத வெற்றி, வெற்றியே இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், எழுத்தாளர்கள் தான் அனுபவத்தை ஆராய்ந்து அனுபவித்து எழுவர்.
நடிர்கள் மட்டுமே உலகம் இல்லை. உலகை தெரிந்துக் கொள்ள இலக்கியங்களை படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் வாசுதேவன், சிறப்பு விருந்தினரான நீதிபதியை கவுரவித்து, பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில், இளங்கலை பிரிவில், 586 பேரும், முதுகலை பிரிவில், 27 பேரும் பட்டம் பெற்றனர். மாணவி திவ்யதர்ஷினி பல்கலை அளவில் முதலிடம் பிடித்தார். இவர் உள்ளிட்ட, 23 பேர் பல்கலை அளவில் பட்டங்கள் பெற்றனர்.
விழாவில், கல்வி குழும துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், கல்லுாரி முதல்வர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
