தனியார் நிறுவன ராக்கெட் அக்னிபான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
தனியார் நிறுவன ராக்கெட் அக்னிபான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
UPDATED : மே 31, 2024 12:00 AM
ADDED : மே 31, 2024 05:11 PM
புதுடில்லி:
விண்வெளி துறையில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த, அக்னிகுல் காஸ்மோஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அக்னிபான் என்ற பெயரில், ராக்கெட்டை செலுத்துவதற்காக இந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிறுவனத்தின் ராக்கெட் செலுத்தும் சோதனை முயற்சி, இதுவரை நான்கு முறை தொழில்நுட்ப கோளாறுகளால் கைவிடப்பட்டது.
முன்னதாக கடந்த 28ம் தேதி, ராக்கெட்டை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.
இருப்பினும், விரைவில் இந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு, ராக்கெட் ஏவப்படும் என்று நிறுவனம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில், பல்வேறு பின்னடைவுகளுக்கு பின், அக்னிபான் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள தனியார் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 7:15 மணிக்கு, இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டார்.
இதையடுத்து, இந்தியாவில் தனியார் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட முதல் ராக்கெட்டாக அக்னிபான் உள்ளது.
மேலும், 3டி அச்சடிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஒரு இன்ஜினில், வெற்றிகரமாக செலுத்தப்பட்ட உலகின் முதல் ராக்கெட்டாகவும் இது உள்ளது.
அத்துடன் இந்தியாவிலே முதல் முறையாக செமி கிரையோஜெனிக் இன்ஜினை இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இது, வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய விமான எரிபொருள், மண்ணெண்ணெய் மற்றும் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் இருந்து உருவானது, அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம். 2017ல் இரண்டு இளம் இன்ஜினியர்களால் துவங்கப்பட்டது.
இவர்களுடைய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்தில், இந்த நிறுவனத்துக்கென தனியாக ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.