அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
UPDATED : ஜூலை 10, 2026 04:40 PM
ADDED : ஜூலை 10, 2026 04:41 PM
நாமக்கல்:
நாமக்கல், எஸ்.பி.,புதுாரில் வசிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊர் மக்கள் சார்பில். ரூ.2.13 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் - பரமத்தி சாலை, சந்தைப்பேட்டைபுதுார் ஊர் மக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 14ம் ஆண்டாக சந்தைப்பேட்டைபுதுார் மடத்தில் நடந்த விழாவுக்கு தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோ, பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா, 7,500 ரூபாய், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
அதே போல் தேர்ச்சி பெற்ற எஸ்.பி., புதுாரில் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு தலா, 3,000 ரூபாய் என மொத்தம், 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
