பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு; மாணவர்கள் கல்வித்தரம் குறைந்து வருகிறது
பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு; மாணவர்கள் கல்வித்தரம் குறைந்து வருகிறது
UPDATED : டிச 25, 2024 12:00 AM
ADDED : டிச 25, 2024 10:23 AM

கோவை:
அதிகரிக்கும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களால், மாணவர்களின் கல்வித் தரம் குறைவதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், 171 அரசு கல்லுாரிகள் மற்றும், 162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில் பல ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் விகிதத்தை அதிகரிக்க,எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், அவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட உயர்ந்துள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதில்லை. தற்போது, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக, பல்கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தகுதியான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இருந்தால் மட்டுமே, மாணவர்களின் அறிவை வளர்க்க முடியும். மாணவர்களின் திறனை பொறுத்து, அதற்கான துறையில் அவர்களை வலுப்படுத்த முடியும்.
ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பால், கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. மாணவர்களால் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பல பிரபலமான கல்லுாரிகள், பல்கலைகளில், ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை, 50 சதவீதத்துக்கும் கீழே சென்றுள்ளது.
இதன் காரணமாக, மாணவர்கள் புத்தகப்புழுக்களாக மட்டுமே இருப்பர். அவர்களின் கல்வித்தரம் தாழ்ந்து வருகிறது.
இதைக்கருத்தில் கொண்டு, பேராசிரியர், விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருங்காலத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. அதனால், இப்போதிருந்தே பணிகளை துவங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.