ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து பொதுப்பிரிவினர் போராட்டம்
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து பொதுப்பிரிவினர் போராட்டம்
UPDATED : ஆக 23, 2026 04:44 PM
ADDED : ஆக 23, 2026 04:46 PM
புதுடில்லி:
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்திய பொதுப்பிரிவினர், 'சலுகைகள் வழங்கும் போது ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
அரசு வழங்கும் உதவிகள் மற்றும் சலுகைகளை தீர்மானிக்க ஜாதியை விட பொருளாதார சூழலுக்கே முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பொதுப் பிரிவினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடஒதுக்கீடு சீர்திருத்த இயக்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்துக்கு 'நீட்' தேர்வுக்கு தயாராகி வரும் ஹர்ஷ் துபே என்ற மாணவர் தலைமை வகித்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த 'ஜெனரல் சேனா, சாணக்கிய சேனா, கர்ணி சேனா' அமைப்புகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றன. இட ஒதுக்கீடு மற்றும் பல்கலை மானியக் குழுவின் சமத்துவ விதிமுறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து வரும் சமூக ஊடகவியலாளர் அஜித் பாரதியும் போராட்டத்தில் பங்கேற்றார்.
மாணவர்களுக்கு கல்வி, பயிற்சி, கட்டண சலுகை, உதவித்தொகை உள்ளிட்ட அரசு உதவிகள் வழங்கப்படும் போது, அவர்களின் பொருளாதார நிலை கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.
இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:
ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது; ஏழைகளுக்கே அது வழங்கப்பட வேண்டும். பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் பலன்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களை எப்போதும் சென்றடைவதில்லை. சில நேரங்களில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
இட ஒதுக்கீட்டில், 'க்ரீமி லேயர்' எனப்படும், வசதி பெற்ற பிரிவினருக்கான வரம்பை அறிமுகப்படுத்த வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கக் கூடாது என நாங்கள் கூறவில்லை. உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவித்தொகை, கல்வி கட்டண சலுகை, பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
இடஒதுக்கிட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனுமதியுடன் போராட்டம் நடத்தியதை அடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
