திட்டமிட்ட இலக்கை எட்டாத பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட்
திட்டமிட்ட இலக்கை எட்டாத பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட்
UPDATED : ஜன 13, 2026 11:02 AM
ADDED : ஜன 13, 2026 11:03 AM
சென்னை:
“பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்டபோது, நன்கு செயல்பட்டது. முதல் இரண்டு நிலைகளில் சீராக சென்ற ராக்கெட், மூன்றாவது நிலையின் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து விலகி சென்றது. இதற்கான காரணம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
நாட்டின் ராணுவ கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில், எல்லை பகுதிகளை துல்லியமாக கண்காணித்து புகைப்படம் எடுக்கும் வகையில், 'இ.ஒ.எஸ்.,- என்1' என்ற அதிநவீன தொழில்நுட்பத்திலான செயற்கைக்கோளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது.
இந்த செயற்கைக்கோளுடன் நம் நாட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் 15 செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10:18 மணிக்கு விண்ணுக்கு பாய்ந்தது.
ராக்கெட், முதல் இரண்டு நிலைகளில் சீராக சென்றது. மூன்றாவது நிலையின் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து விலகி செல்வதை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அடுத்த சில நிமிடங்களில், இஸ்ரோ தலைவர் நாராயணன் விஞ்ஞானிகளிடம் பேசினார்.
அவர் கூறியதாவது:
இந்த ராக்கெட், இரண்டு திட எரிபொருள் மற்றும் இரண்டு திரவ எரிபொருள் என, நான்கு நிலைகளை உடையது. ராக்கெட்டின் மூன்றாம் நிலையின் முடிவில், அதிக இடையூறுகளைக் காண்கிறோம்.
இதனால், திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து ராக்கெட் விலகி சென்றது. நாங்கள் இதற்கான தரவை பகுப்பாய்வு செய்கிறோம்; விரைவில் திரும்பி வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

