மூன்றே மாதங்களில் 7557 பணிநியமனம் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சுறுசுறு
மூன்றே மாதங்களில் 7557 பணிநியமனம் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சுறுசுறு
UPDATED : ஏப் 04, 2025 12:00 AM
ADDED : ஏப் 04, 2025 12:31 PM

மதுரை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களில் பல்வேறு பணிகளுக்கு 7557 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசின் பல்வேறு துறைகளுக்கும் ஊழியர்களை நியமனம் செய்ய பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இவ்வகையில் கடந்த 2023ஐ காட்டிலும் விரைவாக தேர்வு நடத்தி பணிநியமனம் செய்துள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் (நேர்முகத் தேர்வு பதவிகள்) 20 பதவிகளுக்கு 109 காலியிடங்களை பிப்.27ல் நிரப்பியுள்ளனர். இதற்காக 125 நாட்களில் தேர்வு முடிவு வெளியீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகள் நடந்துள்ளது.
இதேபோல குரூப் 4 பணியிடங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என 7427 பணியிடங்கள் மார்ச் 12ல் நிரப்பப்பட்டுள்ளது. இதில் நேரடி நியமனங்களாக பட்டியலினத்தைச் சேர்ந்த 441 பணியாளர்களும் குறைவு காலிப்பணியிடங்களில் (பின்னடைவு பணியிடம்) நிரப்பப்பட்டுள்ளனர். இதற்கான பணிகள் 184 நாட்கள் நடந்துள்ளன.
ஹிந்துசமய அறநிலையத்துறையில் உதவி ஆணையர் உட்பட 21 பணியிடங்கள் மார்ச் 14 ல் நிரப்பப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் 161 நாட்கள் நடந்துள்ளன. இவை அனைத்தும் 2023ம் ஆண்டு பணிநியமனங்களைவிட விரைவாக நடந்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் 5 அல்லது 6 மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிவடைந்துள்ளன.
விரைவான தேர்வு முடிவுகள்
இதேபோல குரூப் 1 குடிமைப் பணிகள் தேர்வு நடத்தி 57 நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்து மார்ச் 14 ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொகுதி 1 பி பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் 48 நாட்கள் பணிமுடித்து, பிப்.20ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாதவை) கணினி வழியில் தேர்வு நடத்தி பிப்.20 அன்று வெளியிடப்பட்டு அடுத்த நடவடிக்கைக்காக காத்திருக்கின்றன.

