புதுச்சேரி பல்கலை., விடுதியில் பிஎச்.டி., மாணவர் தற்கொலை
புதுச்சேரி பல்கலை., விடுதியில் பிஎச்.டி., மாணவர் தற்கொலை
UPDATED : ஏப் 20, 2024 12:00 AM
ADDED : ஏப் 20, 2024 11:14 AM
புதுச்சேரி :
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக விடுதியில், பிஎச்.டி., மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை, ஜீவானந்தபுரம், எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரபாகரன், 28; புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படித்தார். கடந்த 3 ஆண்டுகளாக பல்கலைக்கழக சர்சிவி ராமன் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
பிரபாகரனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அடிக்கடி லாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். ஒராண்டிற்கு முன்னதாக பிரபாகரனுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் உடல்நிலை பிரச்னை கொடுப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் வந்த பிரபாகரன் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரது மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது பெற்றோர் நேற்று காலை காலாப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உதவியுடன் விடுதி அறைக்கு சென்றனர். அங்கு, பிரபாகரன் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. போலீஸ் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, பிரபாகரன் மின் விசிறியில் துணியால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, பிரபாகரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.