UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 12:51 PM
சென்னை:
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது, என கவர்னர் ரவி கூறினார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கே.டி.சி.டி.பெண்கள் மேல்நிலை பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
நுாற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, கவர்னர் ரவி பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரம், கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நுாறாவது ஆண்டு சுந்திர தினம் கொண்டாடும் போது, இந்தியா முழுமையான வல்லரசாகும். அதற்கு பெண் சக்தியின் பங்களிப்பு மிக அவசியம். ஒவ்வொரு வீட்டிற்கும் பெண்களே முதுகெலும்பாக உள்ளனர்.
அதேபோல, நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு, அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம். பெண் சக்தி தான், இந்த நாட்டை முன்னேற்றுகிறது. இந்த நாடு பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டம் தரம் குறைவாக உள்ளது. பல்வேறு கல்லுாரிகளுக்கு சென்ற நான், அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினேன். அவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவை பற்றிய பார்வை, அறிவுத் திறன் குறைவாக உள்ளது.