UPDATED : மார் 09, 2025 12:00 AM
ADDED : மார் 09, 2025 07:54 AM

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றி, 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒன்பது பிரிவுகள் இருந்த நிலையில், தற்போது ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு சமச்சீர் கல்வியில், தமிழ் பாடப்புத்தகம், பாடநுால் கழகம் சார்பில் தயாரித்து வெளியிடப்படுகிறது. இப்புத்தகம் ஒன்பது பிரிவுகளாக இருந்தன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்துக்கு, இதே புத்தகம் பயன்படுத்தப்படுகிறது.
குறித்த காலத்தில் நடத்தி முடிப்பது, மாணவர்களுக்கு கற்றல் சுமை கருதி, கடைசி மூன்று பிரிவுகளான நாகரிகம் மற்றும் சமூகம், அறம் மற்றும் தத்துவம், மனிதம் மற்றும் ஆளுமை பிரிவுகள், டெலீஷன் போர்ஷன் ஆக அறிவிக்கப்பட்டன.
இதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள், தமிழ் தேர்வுக்கு ஆறு பாடப்பிரிவுகளை மட்டும் படித்து தேர்வெழுதிய நிலையில், சமச்சீர் கல்வி மாணவர்கள், ஒன்பது பாடப்பிரிவுகளையும் படித்தனர்.
இதனால், அரசு பள்ளி மாணவ - மாணவியர் அவதிப்படுவதாகவும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக பாடப் பிரிவுகளை குறைக்கவும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கு தமிழ் பாடப்புத்தகத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஒன்பது பாடப்பிரிவுகள் ஏழாக குறைக்கப்பட்டுள்ளன. அறிவியல் தொழில்நுட்பம், ஆளுமை பாடப் பிரிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஆளுமை பாடப்பிரிவில் இருந்த மனிதம், மொழி பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் சுமை குறைக்கப்பட்டதால் தமிழ் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
அதேபோல் பிளஸ் 2 வகுப்பிலும், சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் பாடச்சுமையை குறைக்க, அரசு பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.