1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை 5.5 வயதாக குறைக்க கோரிக்கை
1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை 5.5 வயதாக குறைக்க கோரிக்கை
UPDATED : மார் 30, 2026 06:45 PM
ADDED : மார் 30, 2026 06:49 PM
பெங்களூரு:
'ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பை 5.5 வயதாக குறைக்க வேண்டும்' என பெற்றோர் கோரிக்கை வைத்து உள்ளனர்.
நம் நாட்டில், ஒன்றாம் வகுப்பில் மாணவ - மாணவியர் சேருவதற்கு, 6 வயது பூர்த்தியாக இருக்க வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்தது. இதற்கு கர்நாடகாவில் பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
மத்திய அரசு குறிப்பிடும் வயதை நிர்ணயித்தால், குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும். குழந்தைகளின் ஓராண்டு கல்வி தடைப்படும். எனவே, வயது வரம்பை குறைக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா ஏற்றார். 1ம் வகுப்பில் சேர, 5 வயது 10 மாதம் பூர்த்தியாகி இருந்தால் போதும் என அறிவித்தார். இது, நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படும். இதன் மூலம் வயது வரம்பில் 60 நாட்கள் தளர்வு கிடைத்தது.
இதற்கு பெற்றோரிடம் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், மேலும் வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் சங்கத்தினர் கூறியதாவது:
ஒன்றாம் வகுப்பு சேர்க்கை வயது வரம்பில் தளர்வு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும், கடந்த ஆண்டு அறிவித்தது போல, வயது வரம்பில் தளர்வு செய்ய வேண்டும்.
அதாவது, ஒன்றாம் வகுப்பில் சேர, 5 வயது 6 மாதங்கள் பூர்த்தியாகி இருந்தால் போதும் என அறிவிக்க வேண்டும். அப்போது தான் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
