தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம்: யு.ஜி.சி.,
தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம்: யு.ஜி.சி.,
UPDATED : பிப் 19, 2026 11:44 AM
ADDED : பிப் 19, 2026 11:46 AM

சென்னை:
'அனைத்து பல்கலையிலும், தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம்' என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வழிகாட்டுதல்படி, நாடு முழுதும் உள்ள பல்கலைகளில், 45 நாட்கள் அல்லது அதற்கு மேலான தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்.
இதை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் வலியுறுத்தி உள்ளது. எனவே, தற்காலிக பணி நியமனங்களில், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீடு முறை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.
மேலும், 2023 - 24 மற்றும் 2024 - 25ம் கல்வியாண்டில், கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர் விபரங்களை, யு.ஜி.சி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

