நாமக்கல்லில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம்
நாமக்கல்லில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம்
UPDATED : பிப் 13, 2026 01:00 PM
ADDED : பிப் 13, 2026 01:05 PM

நாமக்கல்:
ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பச்சைமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு, கல்வி நிலை, ஒழுக்கம், கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து தலைமையாசிரியர்களிடம் விபரம் கோரப்பட்டது.
மேலும், 100 நாள் சவால் என்ற அடிப்படையில், மாணவர்களின் கல்வி அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதாவது, 100 நாள்களில் 100 சதவீதம் வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் தயார்படுத்தி மாணவர்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்கான பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கம் செய்யப்பட்ட, மதிப்பீட்டு வினாத்தாளை கொண்டு மாணவர் கற்றல் அடைவை பரிசோதிக்க வேண்டும். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பிப்., 18, 20ம் தேதிகளில் பள்ளிகளுக்கு வந்து மாணவர்கள் கல்வித்திறனை சோதித்து தேவையான அறிவுரை வழங்குவர் என தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல், எருமப்பட்டி, மோகனுார், கொல்லிமலை, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களை சேர்ந்த, 400 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

