இன்ஜி., கல்லுாரி கிரிக்கெட் பைனலில் ஆர்.எம்.கே., அணி
இன்ஜி., கல்லுாரி கிரிக்கெட் பைனலில் ஆர்.எம்.கே., அணி
UPDATED : மார் 06, 2026 10:59 AM
ADDED : மார் 06, 2026 11:00 AM
சென்னை:
மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், ஆர்.எம்.கே., கல்லுாரி அணி, இறுதி போட்டியில், எஸ்.எஸ்.என்., கல்லுாரி அணியை எதிர்கொள்கிறது.
ஆர்.எம்.கே., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், மஞ்சுளா முனிரத்தினம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, திருவள்ளூரில் உள்ள கவரைப்பேட்டையில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த முதல் அரையிறுதியில், ஆர்.எம்.கே., மற்றும் ராஜலட்சுமி கல்லுாரி அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜலட்சுமி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்.எம்.கே., அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
அடுத்து, 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜலட்சுமி அணி, ஆர்.எம்.கே., பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 17.5 ஓவர்களில், 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், ஆர்.எம்.கே., அணி, 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியது.
மற்றொரு அரையிறுதியில், எஸ்.எஸ்.என்., மற்றும் லயோலா ஐகாம் அணிகள் மோதின. டாஸ் வென்ற எஸ்.எஸ்.என்., அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய லயோலா ஐகாம் அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 180 ரன்கள் குவித்தது.
பின் களமிறங்கிய எஸ்.எஸ்.என்., அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19.5 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 184 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று, இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.
குளோப் சி.சி., வெற்றி
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், அண்ணா பல்கலை மைதானத்தில் நடந்த 5வது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், குளோப் சி.சி., அணி, வெங்கட் சி.சி., அணியை எதிர்த்து மோதியது. டாஸ் வென்று முதலில் ஆடிய குளோப் சி.சி., அணி, 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 108 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய வெங்கட் சி.சி., அணி வீரர்கள், சொற்ப ரன்களில் வெளியேறினர். முடிவில், வெங்கட் சி.சி., அணி, 29 ஓவர்களில், 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், குளோப் சி.சி., அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

