செய்யூர் அரசு கல்லுாரி கட்ட ரூ.17.92 கோடி ஒதுக்கீடு
செய்யூர் அரசு கல்லுாரி கட்ட ரூ.17.92 கோடி ஒதுக்கீடு
UPDATED : பிப் 24, 2026 10:27 AM
ADDED : பிப் 24, 2026 10:29 AM

செய்யூர்:
செய்யூரில் துவக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்ட, 17.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் உள்ள 127 கிராமங்களில், 2.75 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக, செய்யூர் பகுதி உள்ளது.
மேலும், செய்யூர் பகுதியில் அரசு கல்லுாரி இல்லாததால், மாணவ, மாணவியர் கல்லுாரிக்காக சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் செய்யூர், மானாமதுரை, ஆலந்துார் உள்ளிட்ட, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய கலைக்கல்லுாரிகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, கல்லுாரி தற்காலிகமாக செயல்பட, செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு அடுக்குகளுடன் கூடிய 9 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில், கல்லுாரி நடத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது 5 பாடப்பிரிவுகளின் கீழ், 230க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் அமைக்க, செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலை அருகே உள்ள அரசுடைமையாக மாற்றப்பட்ட 7.16 ஏக்கர் நிலம், உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
செய்யூர் அரசு கலைக்கல்லுாரிக்கு பொதுப்பணித்துறை சார்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்து, கட்டடங்கள் அமைக்க, 18.5 கோடி ரூபாய் நிதி கேட்டு, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் கல்லுாரி அமைய உள்ள இடத்தில், மண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து, செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்ட, 17.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

