தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ., சேர்க்கை: 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ., சேர்க்கை: 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஏப் 01, 2026 11:15 AM
ADDED : ஏப் 01, 2026 11:17 AM

சென்னை:
தனியார் பள்ளிகளில், ஆர்.டி.இ., சலுகையில், குழந்தைகளை சேர்க்க, வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
கட்டாய கல்வி உரிமை சட்டமான, ஆர்.டி.இ.,யின் படி, தனியார் பள்ளிகளில், நலிந்த பிரிவினருக்கு, 25 சதவீத மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர்.
இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மத்திய - மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான சேர்க்கைக்கு, வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் இருப்பிடத்தில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவுக்குள் உள்ள, சிறுபான்மையற்ற தனியார், சுயநிதி பள்ளிகளில், மொத்த சேர்க்கையில் 25 சதவீதத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்த 2021 ஆக., முதல் 2022 ஜூலைக்குள் பிறந்தவர்கள் எல்.கே.ஜி.,யிலும், 2019 ஆக., முதல் 2020 ஜூலைக்குள் பிறந்தவர்களை முதல் வகுப்பிலும் சேர்க்கலாம்.
இதற்கு, குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் இருப்பிடச் சான்றிதழ், வருமானம் மற்றும் ஜாதிச் சான்றிதழ்களை இணைத்து, 'rte.tnschools.gov.in' என்ற இணையதளம் வாயிலாக, வரும், 20ம் தேதி முதல், மே 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
