அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் ஆபத்தான கட்டடத்தால் அச்சம்
அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் ஆபத்தான கட்டடத்தால் அச்சம்
UPDATED : ஏப் 22, 2026 02:24 PM
ADDED : ஏப் 22, 2026 02:26 PM

ஆர்.கே.பேட்டை:
அரசு பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வி.ஏ.ஓ., கட்டடத்தால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில், அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதே வளாகத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகமும் உள்ளது. இக்கட்டடம் சேதமடைந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், தற்போது பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளது.
தற்காலிகமாக, அருகிலுள்ள கிராம சேவை மைய கட்டடத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஆனால், அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பழைய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இது வரை முழுமையாக இடித்து அகற்றப்படாமல் உள்ளது.
இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் இறைவணக்க கூடத்தில் கூடும் போதும், விளையாட்டு பாடவேளையில் விளையாடும் போதும், அதே வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே வரும் நிலை உள்ளது. இதனால், பெற்றோர் விபத்து அச்சத்தில் தவிக்கின்றனர்.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பாழடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை உடனே இடித்து அகற்ற வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
