ஜனவரி மாதத்திற்கான ஊதியம் கட்; இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி
ஜனவரி மாதத்திற்கான ஊதியம் கட்; இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி
UPDATED : மார் 09, 2026 12:05 PM
ADDED : மார் 09, 2026 12:05 PM

சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாதத்திற்கான ஊதியம் நிறுத்தப்பட்டது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஆண்டு டிச., 26 முதல், சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வந்தனர்.
அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி, 5ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது.
வகுப்பறைகளில் கற்பித்தல் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், தொடக்கக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில், 'பணிக்கு வருகை தராமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊதியமில்லாத விடுப்பு பதிவு செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், ஜன., 31ல் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
எனினும், போராட்டத்தில் பங்கேற்ற, 10,000க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தியுள்ளது.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய, ஆசிரியர்களின் ஊதியத்தை, அரசே நிறுத்தி வைத்துள்ளது. இது, ஆசிரியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

