UPDATED : பிப் 25, 2026 11:00 AM
ADDED : பிப் 25, 2026 11:03 AM

சென்னை:
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதும், 'ஸ்கிரைப்' விஷயத்தில், பள்ளிக்கல்வி துறை தடுமாறுவதாக புகார் எழுந்துள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, தேர்வு எழுத உதவும் வகையில், உதவியாளராக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். கேள்விகளுக்கான பதிலை மாணவர்கள் சொல்லச் சொல்ல, அதைக் கேட்டு ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதுவர். இப்பணியில் இது வரை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்தாண்டு, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களையும், ஆசிரியர் பயிற்சி பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களையும் உதவியாளர்களாக நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால், போதுமான எண்ணிக்கையில் தன்னார்வலர்களும், கல்லுாரி மாணவர்களும் கிடைக்கவில்லை என, தலைமை ஆசிரியர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, மீண்டும் பழையபடி ஆசிரியர்களே, 'ஸ்கிரைப்'பாக செயல்படலாம் என, பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது. ஆனால், அதற்கான சுற்றறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
அதனால் தற்போது பல மாவட்டங்களில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு, 'ஸ்கிரைப்' பயிற்சி வழங்கப்படுவதாக தலைமை ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தற்போது, பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களின் தலைமையில், ஸ்கிரைப் பயிற்சி தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து கேட்டால், திருத்தப்பட்ட உத்தரவுக்கான சுற்றறிக்கை இன்னும் தங்களுக்கு வரவில்லை என்பதால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, பயிற்சி வழங்குவதாக பதில் அளிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்கிரைப் பயிற்சி, ஆசிரியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. அதாவது, பி.எட்., எம்.எட்., உள்ளிட்ட ஆசிரியர் தகுதிகளுடன் உள்ள பள்ளி மேலாண்மை திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. அதைப் பற்றி புரியாத தலைமை ஆசிரியர்கள் புகார் செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

