அறிவியலை வளர்க்கும் நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
அறிவியலை வளர்க்கும் நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM
ADDED : ஜூலை 05, 2024 09:42 AM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாதம் தோறும் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பாக, திறம்படக்கேள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது, ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஜூன் மாதம் திறம்படக் கேள் நிகழ்வு, குழந்தைகள் மனதில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்வாக நடைபெற்றது. இந்த நிகழ்வு விருதுநகர் ரோட்டரி கிளப், இதயம் மற்றும் பரிக்சான் அறக்கட்டளை சார்பாக மேற்கொள்ளப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார். அறக்கட்டளையைச் சார்ந்த தன்னார்வலர் அறிவரசன், அறிவியல் சோதனைகளை குழந்தைகளையே செய்ய வைத்து விளக்கினார். வாகனங்களில் ஏர்பேக் வேலை செய்யும் விதம், இடப்பெயர்ச்சி வினைகள், காந்தவியல், கனிமங்கள் சேர்மங்கள் ஆக மாறும்போது நிகழும் வினை போன்றவற்றை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து விளக்கிக்கூறினார்.
குழந்தைகள் சோதனைகளை பார்ப்பவராக இருக்காமல், செய்பவராக இருந்தது இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக இருந்தது. பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.