UPDATED : மார் 20, 2026 05:28 PM
ADDED : மார் 20, 2026 05:29 PM
பாலக்காடு:
பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் பிளஸ் 1 மாணவர்களுக்கான அறிவியல் முகாம், வரும், மே 18ல் துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி., வளாகத்தில் இயற்பியல் துறையின் பேராசிரியராகவும், மாணவர் டீனாகவும் இருந்த முனைவர் வத்சகுமாரின் நினைவாக, மே மாதம் 18ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை அறிவியல் முகாம் நடக்கிறது.
'வத்சாவுடன் பயணத்தைத் தொடருங்கள்' என்ற தலைப்பில், 10 நாட்கள் நடக்கும் முகாமில், கேரளா மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள, பிளஸ் 1 அறிவியல் பிரிவு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்பவர்கள், ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலாம். அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான அமர்வுகள், சோதனை அமர்வுகள் மற்றும் புதிர்கள் இருக்கும்.
முகாம் நாட்களில், உணவு, தங்கும் வசதி ஆகியவை வழங்கப்படும். உதவித்தொகை மற்றும் பயணச் செலவு வழங்கப்படும்.
https://squest.iitpkd.ac.in/ வாயிலாக, பத்தாம் வகுப்பு சான்றிதழின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டால், பள்ளி முதல்வரின் சான்று பெற்று வழங்க வேண்டும். இச்சான்றின் மாதிரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏப்., 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் ஏப்., 21 தேதிக்குள் பாலக்காடு ஐ.ஐ.டி., இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு, sciencequest@iitpkd.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
