ஸ்க்ரைப் கலாசாரம் அதிகரிப்பு; கண்டு கொள்ளுமா கல்வித்துறை
ஸ்க்ரைப் கலாசாரம் அதிகரிப்பு; கண்டு கொள்ளுமா கல்வித்துறை
UPDATED : ஏப் 14, 2025 12:00 AM
ADDED : ஏப் 14, 2025 10:16 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் பொதுத் தேர்வில், கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்காக ஆசிரியர்களே தேர்வு எழுதும் கலாசாரம் அதிகரித்து வருவதை தடுக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பொதுத் தேர்வு எழுதுபவர், பார்வையற்றவர், கை எலும்பு முறிவு, நரம்பு தளர்ச்சி மற்றும் பத்தில் சிக்கியவர் என்றால் உரிய மருத்துவ சான்றின் பேரில் ஸ்க்ரைப் எனப்படும் சொல்வதை கேட்டு எழுதுபவர் உதவியுடன் தேர்வு எழுதும் நடைமுறை உள்ளது. இதற்கு, முன்கூட்டியே பள்ளிக் கல்வித்துறையின் அனுமதி பெற வேண்டும்.
கடந்த காலங்களில் புதுச்சேரியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த ஸ்க்ரைப் முறை சமீப காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளது. தேர்ச்சி இலக்கிற்காக, பள்ளி நிர்வாகங்களே கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு மருத்துவ காரணத்தை கூறி சான்று பெற்று பள்ளிக் கல்வித்துறையின் அனுமதியுடன் ஆசிரியர்களை கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
கடந்த காலங்களில், ஸ்க்ரைப் ஆக செல்பவர், சம்மந்தப்பட்ட தேர்விற்கு தொடர்பில்லாதவராக இருப்பார். அதாவது கணித தேர்விற்கு தமிழ் ஆசிரியரும், அறிவியல் தேர்விற்கு ஆங்கில ஆசிரியர் என மாற்றி பணியமர்த்தப்படுவர். தற்போது அதனையும் மாற்றி, சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களே ஸ்க்ரைப்பாக பயன்படுத்தப்பட்டு வருவது, கற்றலில் ஆர்வம் உள்ள மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வேதனையாக உள்ளது.