UPDATED : பிப் 05, 2026 12:23 PM
ADDED : பிப் 05, 2026 12:25 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி, சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 2025 - 26ம் கல்வியாண்டில், 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் 4 ஆயிரம் வீதம் சிறப்பு பயிற்சியாளர்ளுக்கு மூன்று மாதங்களுக்கு 12 ஆயிரம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது.
அதுபோல், 5,804 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம், பள்ளி மாணவிகள் எந்தவொரு சூழலையும் தைரியமாக, நிதானமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையில் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக்கலை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, புதுப்பேட்டை மற்றும் பூதாமூர், தென்கோட்டைவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளிகள், விளாங்காட்டூர் நடுநிலைப் பள்ளி, தொரவளூர், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. வாரம் இருமுறை வீதம் 3 மாதங்களுக்கு 24 வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் பெண் மற்றும் ஆண் பயிற்சியாளர்கள் வாயிலாக சிறப்பு பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. அதில், மாணவிகளின் விரல் நகம், ஹேர்பின் மற்றும் கையில் கிடைக்கும் அனைத்து வித பொருட்களின் உதவியுடன் தங்களை தற்காத்து கொள்வது, அதற்கான தன்னம்பிக்கை, எதிர்ப்பு ஆற்றலை மனதில் வளர்க்கும் வகையில் பயிற்சிகள் தரப்படுகிறது.
இதன் மூலம் நடந்து செல்லும் போது, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது நகை பறிப்பு, மொபைல் போன் பறிப்பு போன்ற அசம்பாவிதங்களின் போது அவற்றை தவிர்த்தல், தடுத்தல் மற்றும் திருப்பி தாக்குதல் என மூன்று முறைகளில் மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர்.

