பழங்குடியின மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்ப பயிற்சி
பழங்குடியின மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்ப பயிற்சி
UPDATED : ஆக 09, 2024 12:00 AM
ADDED : ஆக 09, 2024 09:17 AM
சென்னை:
சுமார் 1500 பழங்குடி இன மாணவர்களுக்கு செமிகண்டக்டர் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் துர்காதாஸ் யுகே தெரிவித்தார்.
மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான செமிகண்டக்டர் கட்டுருவாக்கம் மற்றும் இயல்பாய்வு குணாதிசயப் பயிற்சி' என்ற திட்டத்தை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்திடம் ஒப்படைத்துள்ளது. மூன்று ஆண்டுகளில் பழங்குடி மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் பயிற்சியை வழங்குவதை, இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையத்துடன் இணைந்து 1500 பழங்குடியின மாணவர்களுக்கு அடிப்படைப் பயிற்சியையும், 600 பழங்குடியின மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட பயிற்சியையும் அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கும். பொறியியல் பாடங்களில் ஒன்றில் பட்டம் பெற்ற அனைத்து பழங்குடியின மாணவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதற்காக, 6 பெரிய நானோ மையங்களை உருவாக்கியுள்ளது. இந்த நானோ மையங்களில் உள்ள பட்டப்படிப்புகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளனர்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் துர்காதாஸ் யுகே இதனைத் தெரிவித்தார்.