இன்னும் புத்தகம் வழங்கவில்லை அரசு பள்ளி மாணவனால் அதிர்ச்சி
இன்னும் புத்தகம் வழங்கவில்லை அரசு பள்ளி மாணவனால் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 04, 2026 11:41 AM
ADDED : ஜூலை 04, 2026 11:42 AM
பள்ளிப்பாளையம்:
'8ம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கு இன்னும் புத்தகம் வழங்கவில்லை' என, அப்பள்ளி மாணவன் பேசிய வீடியோ பரவியதால், மற்ற மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், 'வணக்கம், நான், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறேன். என்னை போன்ற சில மாணவர்களுக்கு, இன்னும் புத்தகம் வழங்கவில்லை. ஆசிரியரிடம் கேட்டால், 'அக்கம் பக்கத்தினரிடம் வாங்கி படி' என்கின்றனர். புத்தகம் இல்லாமல் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. புத்தகம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' என, தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை மற்ற மாணவர்களின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஷ்வரனிடம் கேட்ட போது, “கடந்தாண்டு, 8ம் வகுப்பில், 33 மாணவர்கள் படித்தனர். இந்தாண்டு, 44 பேர் படிக்கின்றனர். 33 மாணவர்களுக்கு, அரசு புத்தகம் வழங்கி உள்ளது. அதை வாங்கி மாணவர்களுக்கு வழங்கி உள்ளோம். வீடியோ வெளியிட்ட மாணவர், ஆங்கில வழிக்கல்வி மாணவர். அவருக்கு, நேற்று புத்தகம் வழங்கி விட்டோம். மீதமுள்ள மாணவர்களுக்கு, வரும், 10ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்கிவிடுவோம்,” என்றார்.
