வெளிப்படைத்தன்மை இல்லாமல் எஸ்.ஐ.,தேர்வு முடிவு வெளியீடு குழப்பத்தில் தேர்வர்கள்
வெளிப்படைத்தன்மை இல்லாமல் எஸ்.ஐ.,தேர்வு முடிவு வெளியீடு குழப்பத்தில் தேர்வர்கள்
UPDATED : ஜன 29, 2026 01:33 PM
ADDED : ஜன 29, 2026 01:34 PM
மதுரை: போலீஸ் துறையில் நேரடி எஸ்.ஐ., 1299 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இடஒதுக்கீடின்றி வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த டிச., 21ல் போலீஸ் எஸ்.ஐ., எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் 'பொதுவாக' வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
தேர்வு முடிவுகளில் பொதுப் பிரிவு, ஜாதிப் பிரிவு, தமிழ் வழி படித்த மாணவர்கள், போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
டிச., 26ல் வெளியான போலீஸ் எழுத்துத்தேர்வு முடிவில் தேர்வர்களுக்கு புரியும்படி 'கட் ஆப்' மதிப்பெண்கள் மற்றும் ஜாதி ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டன.
ஆனால் எஸ்.ஐ., தேர்வு முடிவுகளில் இத்தகைய வெளிப்படைத் தன்மைகள் இல்லை. இந்த தேர்வு முடிவு குறித்து எங்களுக்கு சந்தேகம் உள்ளது. தவிர, பெரும்பாலான தேர்வர்கள் தமிழக அரசு வெளியிட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்தே படித்து தேர்வு எழுதினர். ஆனால் அதற்கு மாறாக பாடத்தில் குறிப்பிடாதவைகளை விடை குறிப்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்த அதிர்ச்சியாக தற்போது வெளிப்படைத் தன்மை இல்லாமல் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.

