அறிவு சார் மையத்தில் வசதி இல்லை சிவகங்கை மாணவர்கள் புகார்
அறிவு சார் மையத்தில் வசதி இல்லை சிவகங்கை மாணவர்கள் புகார்
UPDATED : டிச 19, 2025 07:04 AM
ADDED : டிச 19, 2025 07:04 AM
சிவகங்கை:
சிவகங்கை நகராட்சி அறிவுசார் மையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை நகராட்சி கட்டுப்பாட்டில் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் அறிவுசார் மையம் உள்ளது. இங்கு அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் படிப்பதற்கு தேவையான கணினி உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் குறைவாக இருப்பதாகவும், கணினியை பயன்படுத்த போதிய இணைய வசதி கிடைப்பதில்லை என புகார் உள்ளது.
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வரும் மையத்தில் 3 கழிப்பறை தான் உள்ளது.
அதில் பெண்களுக்கு ஒன்று தான் உள்ளது. கூடுதல் கழிப்பறை கட்ட வேண்டும். மற்ற மாவட்டங்களில் காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை அறிவுசார் மையங்கள் இயங்குகிறது. ஆனால் இங்கு மட்டும் மாலை 6:00 மணியோடு முடிவடைந்து விடுகிறது.
கூடுதல் நேரம் அறிவுசார் மையம் இயங்க வேண்டும். மாணவர்களின் டூவீலர்கள் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் ரோட்டில் நிறுத்தப்படுகிறது. மதிய நேரத்தில் மாணவர்கள் உணவு அருந்த வசதி கிடையாது.
இது குறித்து பலமுறை நகராட்சியிடம் கோரிக்கை வைத்து எந்த நடவடிக்கையும் இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

