50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு 48 கோடி ரூபாயில் திறன் மேம்பாட்டு பயிற்சி
50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு 48 கோடி ரூபாயில் திறன் மேம்பாட்டு பயிற்சி
UPDATED : செப் 03, 2026 08:56 AM
ADDED : செப் 03, 2026 08:57 AM
சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், வெளியிட்ட அறிவிப்புகள்:
கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஐந்து அரசு தொழில்பயிற்சி நிலையங்களில், தொழில் திறன்மிகு மையங்கள், அமைக்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் தொழில் பிரிவுகளில் போட்டிகள் நடத்தி, முதல் மூன்று இடங்களை பெறும் வெற்றியாளர்களுக்கு ஆண்டுதோறும் முதல்வரின் வெற்றி விருதுகள், பரிசு தொகையுடன் வழங்கப்படும்.
பெருநகரங்களுக்கு வேலை தேடி வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, இடைநேர தங்குமிடங்கள், சென்னை, கோவையில், 14 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
பதிவு பெற்ற, 1,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிறப்பு திறன் பயிற்சி அளித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு, அயலகம் செல்லும் தமிழக கட்டுமான வெற்றி கரங்கள் திட்டம், 15.06 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.
அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்றவர்களில், 1,000 பேருக்கு, புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்க, 50 சதவீத மானியம் அதிகபட்சம், 75,000 ரூபாய் வரையும்; 1,000 பேருக்கு ஆட்டோக்களை சி.என்.ஜி.,க்கு மாற்ற, 50 சதவீதம் மானியம் அதிகபட்சம், 30,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 50,000 தொழிலாளர்களுக்கு, கட்டுமான வேலை, தச்சு வேலை, பிளம்பர், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல தொழில்களில் தினமும், 800 ரூபாய் ஊதிய இழப்பீட்டு தொகையுடன் கூடிய ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, 48.26 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
ஐ.டி.ஐ., வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றி திட்டம் வாயிலாக, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை உறுதி செய்ய, 7.33 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
