சோடியம் பேட்டரி தொழில்நுட்பம் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்: ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை
சோடியம் பேட்டரி தொழில்நுட்பம் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்: ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை
UPDATED : மார் 11, 2026 12:58 PM
ADDED : மார் 11, 2026 01:00 PM

புதுச்சேரி:
வருங்காலத்தில் சோடியம் பேட்டரி தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என, சோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சோகோ நிறுவனம் இடையே புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்ரீதர் வேம்பு, கூறியதாவது:
தற்போது ஐ.டி., துறையிலிருந்து மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் நானோ டெக்னாலஜி போன்ற உற்பத்தித் துறையை நோக்கிப் பெரிய மாற்றம் நடந்து வருகிறது. இதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு அடித்தளமாக அமையும். அடுத்த 2, 3 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு, பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படும்.
சோகோ சார்பில், 25 மெகாவாட் சோலார் மின்சாரம் தயாரிக்கிறோம். மலிவான பேட்டரி சேமிப்பு தேவை. இதற்கு சோடியம் பேட்டரி தொழில்நுட்பம் மிக முக்கியமானது. இது மின்சார வாகனங்கள் மற்றும் எரிசக்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தும். கார்பன் பைபர், ட்ரோன் மற்றும் மிசைல் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்தியா ஏ.ஐ., துறையில் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. தொழில்நுட்பத்தை குழந்தைகளிடம் கொண்டு செல்லக் கூடாது. 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. அது போல் ஆந்திராவிலும் கொண்டு வரப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது' என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

