UPDATED : ஜூன் 29, 2026 12:59 PM
ADDED : ஜூன் 29, 2026 01:00 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆணை வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கான சிறப்பு ஆணை வழங்கும் விழா, கிணத்துக்கடவு டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர்கள் எடிசன் பெர்னாட், பூம்பாவை, மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், 20 ஆண்டுகள் சிறப்பாக ஆசிரியர் பணி முடித்த, 32 ஆசிரியர்களை பாராட்டி வட்டார கல்வி அலுவலர்கள் சிறப்பு ஆணையை வழங்கினர்.
மேலும், நிலுவையில் உள்ள ஆசிரியர்களுக்கு, வரும் நாட்களில் சிறப்பு ஆணை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
