தமிழ் கலாசாரத்தை எல்லா இடத்திலும் பரப்புங்கள்: கவர்னர் வேண்டுகோள்
தமிழ் கலாசாரத்தை எல்லா இடத்திலும் பரப்புங்கள்: கவர்னர் வேண்டுகோள்
UPDATED : பிப் 21, 2026 03:23 PM
ADDED : பிப் 21, 2026 03:25 PM
காஞ்சிபுரம்:
“பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள பழங்குடியின மாணவ, மாணவியர், தமிழக கலாசாரம் குறித்து தங்கள் மாநில மக்களிடம் பரப்ப வேண்டும்; சமூக வலைதளங்களிலும் பகிர வேண்டும்,” என, பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி நேற்று பேசினார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 17வது பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை, நேற்று முன்தினம் துவங்கியது.
தேசிய ஒருமைப்பாடு இதில், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்த, 200 பழங்குடியின மாணவ, மாணவியர் பங்கேற்று உள்ளனர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:
நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 200 மலைவாழ் மாணவ, மாணவியர்களுக்கு, இளைஞர் பரிமாற்ற திட்டம் நடப்பது, தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் செயல். உள்ளூர் விருந்தோம்பலை சங்கரா கல்லுாரி செய்திருக்கிறது. கவர்னர் வந்திருப்பது இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இவர்கள் 200 பேரும், தமிழகத்தின் அருமை, பெருமைகளை சொந்த ஊர்களில் விளக்குவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:
சங்கராச்சாரியார், 2,000 ஆண்டுகளுக்கு முன், பாரதம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, காஞ்சியில் காமகோடி பீடத்தை நிறுவினார். ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதெல்லாம், தன்னுடைய ஞானத்தை பரப்பினார்.
சமூக வலைதளம் பாரதத்தை ஒரு குடும்பமாக பாவிக்க வேண்டும் என்பதற்காகவே, இது போன்ற பரிமாற்ற திட்டங்களை செய்கிறோம். இன்னும் பழங்குடியினர் பின்தங்கி உள்ளனர்.
தமிழகத்தில் நீங்கள் பார்க்கும் விபரங்கள், தெரிந்து கொண்டவற்றை அன்றாடம் டைரியில் எழுதி வையுங்கள்.
தமிழில் 10 வாக்கியங்களை தெரிந்து கொள்ளுங்கள். தமிழக கலாசாரத்தை சமூக வலைதளங்களில் பகிருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், 'மை பாரத்' மாநில இயக்குநர் செந்தில்குமார், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தலைவர் ராமச்சந்திரன், கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த இளைஞர் பரிமாற்ற விழா, வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
எல்லாம் அரசியல் தான்!
தமிழக கவர்னர் ரவி, மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். அதில், மத்திர பிரதேச மாநிலம், பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பங்கஜ் மார்க்கம், “தமிழகத்தில் பலரும் ஏன் ஹிந்தி பேசுவதில்லை,” என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கவர்னர் ரவி, “இதற்கு அரசியல் காரணமாக இருக்கலாம். என்ன தடங்கல் வந்தாலும் நாம் ஒற்றுகையாக இருந்து, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்; குருட்டு நம்பிக்கைகளை ஒதுக்க வேண்டும்,” என்றார்.

