UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 08:36 PM
புதுடில்லி:
உத்தர பிரதேசத்தில் மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004ஐ ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004 அமலில் இருந்தது. இச்சட்டத்தின்படி, இஸ்லாமிய கல்வி முறை குறித்து இஸ்லாமிய மாணவர்களுக்கு கற்று தரப்பட்டு வந்தது.
மேல்முறையீடு
இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, கடந்த மாதம் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 'உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004, அரசியலமைப்புக்கு எதிரானது' எனக் கூறி ரத்து செய்தது.
மேலும், மதரசா மாணவர்களுக்கு முறையான கல்வி முறையில் இடமளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
மதரசா கல்வி வாரிய சட்டத்தின் விதிகளை ரத்து செய்து, மாணவர்களை இட மாற்றம் செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, 17 லட்சம் மாணவர்களை பாதிக்கும். மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.
இந்த பொது நல மனுவின் நோக்கம், கணிதம், அறிவியல், வரலாறு, மொழிகள் போன்ற முக்கிய பாடங்களில், மதரசாக்கள் மதச்சார்பற்ற கல்வியை வழங்குவதை உறுதி செய்வதாக இருந்தால், மதரசா சட்டம் - 2004ஐ ரத்து செய்வது தீர்வாக இருக்காது.
மதரசா கல்வி வாரியத்தின் நோக்கங்கள் இயற்கையில் ஒழுங்குமுறை கொண்டவை. இந்த வாரியம் அமைப்பதால் மதச்சார்பின்மை பாதிக்காது.
நோட்டீஸ்
இந்த சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து, மத்திய - மாநில அரசுகள் மற்றும் மதரசா வாரியம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், உ.பி.,யில் உள்ள 16,000 மதரசாக்கள், 2004 சட்டத்தின் கீழ் தொடர்ந்து செயல்படலாம்.