UPDATED : பிப் 10, 2026 01:14 PM
ADDED : பிப் 10, 2026 01:17 PM
ஸ்ரீபெரும்புதுார்:
ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கம் மற்றும் சென்னக்குப்பம் அரசு பள்ளிகளில், தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில், 'ஸ்டெம் லேப்' நேற்று திறக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பாக கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாம்பாக்கத்தில் உள்ள கண்ணாடி உற்பத்தி 'செயின் கோபைன்' தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், 11 லட்சம் ரூபாய் செலவில், சமஸ்கிரியா அறக்கட்டளையுடன் இணைந்து 'ஸ்டெம் லேப்' நேற்று திறக்கப்பட்டது.
இதில், சமஸ்கிரியா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சந்தியா, மாம்பாக்கம் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயம், 'செயின் கோபைன்' தொழிற்சாலை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதே போல, ஒரகடம் அருகே சென்னக்குப்பத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் செயின் கோபைன் தொழிற்சாலை சார்பில் 'ஸ்டெம் லேப்' திறக்கப்பட்டது.
இதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல், சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் குழுப்பணி ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என தெரிவித்தனர்.

