UPDATED : ஆக 21, 2024 12:00 AM
ADDED : ஆக 21, 2024 10:38 AM
கோட்டா:
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் குஷாகரா ரஸ்டோகி, 18. இவர், ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து இன்ஜினியரிங் படிக்கும் நோக்குடன், கடந்த ஏப்ரலில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் இணைந்தார்.
இதற்காக, அந்த சென்டரின் விடுதியில் தன் தாயுடன் ரஸ்டோகி தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் குளிக்க சென்றார். நீண்டநேரமாகியும் ரஸ்டோகி வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது தாய் குளியல்அறைக்கு சென்று பார்த்தார்.
அங்கு, அவரது மகன் மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். விடுதி நிர்வாகிகளின் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது, ரஸ்டோகி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ரஸ்டோகியின் தாய் புகார் அளிக்காததுடன், பிரேத பரிசோதனையும் நடத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, மாணவரின் உடல் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும், இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.