மரங்கள் வளர்ப்பில் அக்கறை குளு குளு சூழலில் மாணவர்கள்
மரங்கள் வளர்ப்பில் அக்கறை குளு குளு சூழலில் மாணவர்கள்
UPDATED : பிப் 02, 2026 01:52 PM
ADDED : பிப் 02, 2026 01:54 PM

அருப்புக்கோட்டை: ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் இருக்க அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என அறிஞர்கள் கணக்கிட்டு உள்ளனர். ஆண்டுகள் கடந்தும் காடுகள் அழிவை சந்தித்து கொண்டு தான் உள்ளன. காடுகளின் பரப்பளவு சதவிகித அளவை கூட்டுவதில் நாம் மெத்தனமாக உள்ளோம்.
இதனால் பல்வேறு இயற்கை சீற்றங்களை நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மனிதர்களுக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் மரங்கள் பல்வேறு விதமான நன்மைகளை செய்து கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் மரங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. மனிதர்கள் மரங்களைச் சார்ந்து உள்ளனர்.
மரங்கள் நம்மை சுற்றி இருப்பதால் மன அமைதி கிடைக்கிறது. ஓய்வு எடுக்க நிழல் தருகிறது. பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மரங்கள் முக்கியம். அவை இல்லை என்றால் உலகில் வாழ்வது கடினம். வருங்கால சந்ததியினருக்கு பசுமையான உலகத்தை வழங்குவதற்கு மரங்களை நாம் காப்பாற்ற வேண்டும். அதிகமாக வளர்க்க வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உண்ணும் உணவு வரை மரங்களில் இருந்து பெறுகிறோம்.
இன்றைக்கு மரங்களை அதிகமாக வெட்டி சாய்த்ததால் தான் சுனாமி, நிலநடுக்கம், புயல், வெள்ளம், வறட்சி, அதிக வெப்பமயமாதல் போன்றவை உருவாகிறது. இவற்றிற்கு காரணம் இயற்கை பேரிடர்கள் அல்ல. அதிக அளவில் மரங்களை வெட்டிய மனிதர்கள் தான் காரணம்.
ஒவ்வொருவரும் வீட்டிலும், பொது இடங்கள், பள்ளி வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம். மரங்களை வளர்ப்பது நம் அடிப்படை கடமைகளில் ஒன்று. யார் யாரெல்லாம் சுவாசிக்கின்றனரோ அவர்கள் எல்லாம் மரங்களை நட வேண்டும் என்ற நிலை இன்றைய சூழலில் உள்ளது.
அந்த வகையில், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா கான்வென்ட் மற்றும் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் சுமார் 800க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்களை வளர்த்து குளு குளு சூழலை ஏற்படுத்தி உள்ளனர். ருத்ராட்சம், இலுப்பை, மகிழம், புங்கை, நாகலிங்கம், கொன்றை, வாகை, அரச மரம், மருதம், தேக்கு உட்பட, பலவித ரக மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு மரங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களை பள்ளி நிகழ்ச்சிகள், விழாக்கள் நடக்கும் போது முதல் நிகழ்வாக மரக்கன்றுகளை நட சொல்வதை கட்டாயமாக வைத்துள்ளனர்.
என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முகாம்கள் நடைபெறுகிற போது சுற்றியுள்ள கிராமங்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் மரங்கள் அடர்ந்து வளர்ந்து குளுமையான சூழல் இருப்பதால் மாணவர்கள் இயற்கைச் சூழலில் படிக்க வசதியாக உள்ளது.
அரிய வகை மரங்கள்
ராஜேந்திரன், பள்ளி செயலாளர்: எங்கள் பள்ளிகள், கல்லூரியில் ருத்ராட்சம், நாகலிங்கம் உள்ளிட்ட அரிய வகை மரங்களை வளர்த்து வருகிறோம். மரங்கள் வளர்ப்பின் அவசியத்தை மாணவர்கள் உணர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு மரக்கன்றுகளை வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். இயற்கையான சூழல் பள்ளிகள், கல்லூரி வளாகங்களில் இருப்பதால் மாணவர்கள் அமைதியான சூழலில் படிக்கின்றனர்.
மரக்கன்றுகள் நடுவது கட்டாயம்
பாலசுப்பிரமணியன், முதல்வர்: எங்கள் பள்ளி வளாகத்தில் பலவித ரகங்களை சேர்ந்த பயனுள்ள மரங்களை பல ஆண்டுகளாக வளர்த்து பராமரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் நடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வனத்துறையுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றோம். மாணவர்களுக்கு மரங்கள் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தி, அவர்கள் மூலமாக மரக்கன்றுகளை வளர்த்து பாதுகாக்கின்றோம்.

