போட்டியா, பருவத்தேர்வா குழப்பத்தில் மாணவர்கள்; கல்வித்துறை அறிவிப்புகளால் சர்ச்சை
போட்டியா, பருவத்தேர்வா குழப்பத்தில் மாணவர்கள்; கல்வித்துறை அறிவிப்புகளால் சர்ச்சை
UPDATED : ஜூலை 22, 2025 12:00 AM
ADDED : ஜூலை 22, 2025 08:56 AM

மதுரை :
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகளும், முதல் இடைப்பருவத் தேர்வு அட்டவணையும் ஒரே நாட்களை கொண்டுள்ளதால் இவற்றில் எதில் பங்கேற்க வேண்டும் என்ற குழப்பம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மாநில அளவில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு ஜூலை 29 துவங்கி 31 வரை நடக்கும் என மதுரை உட்பட பெரும்பாலான மாவட்ட சி.இ.ஓ.,க்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வினாடி வினாப் போட்டிகள் ஜூலை 21 முதல் 31 க்குள் நடத்த வேண்டும் என கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இதனால் ஜூலை 29, 30 31 ஆகிய நாட்களில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மன்றப் போட்டிகளில் பங்கேற்பதா அல்லது இடைப்பருவ தேர்வில் பங்கேற்பதா என குழப்பத்தில் உள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: இலக்கிய மன்றம் சார்பில் சமத்துவம், அமைதி, நம்பிக்கை என்ற தலைப்புகளில் ஒவ்வொரு வகுப்பிலும் கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள், கதை கூறுதல் உட்பட தலா 8 போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு போட்டிக்கும் பொறுப்பு ஆசிரியர்கள், நடுவர்களை தேர்வு செய்து, வெற்றி பெறும் மாணவர்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வது வரை கல்வித்துறை வெளியிட்டுள்ள ஏராளமான வழிகாட்டுதல் முறைகளால் ஜூலை 31 வரை ஆசிரியர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேநேரம் ஆறு முதல் பத்தாம் வகுப்புகளுக்கு ஜூலை 29 முதல் 31 வரை முதல்இடைப்பருவத் தேர்வும் நடக்கிறது.
இதனால் ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர். கல்வித்துறையின் மாநில காலண்டரில், முதல் இடைப்பருவத் தேர்வுகளை ஜூலை 16 முதல் 18க்குள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் ஜூலை கடைசி வாரத்தில் தான் முதல்இடைப்பருவ தேர்வுக்கான அட்டவணையை சி.இ.ஓ.,க்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி ஜூலை 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் போட்டிகளும், தேர்வும் ஒரே நாளில் நடக்க வாய்ப்புள்ளது. இக்குழப்பத்திற்கு கல்வி அதிகாரிகள் தீர்வுகாண வேண்டும் என்றனர்.