பூணுால் அகற்றாத மாணவர் நுழைவுத்தேர்வுக்கு அனுமதி மறுப்பு
பூணுால் அகற்றாத மாணவர் நுழைவுத்தேர்வுக்கு அனுமதி மறுப்பு
UPDATED : ஏப் 21, 2025 12:00 AM
ADDED : ஏப் 21, 2025 08:56 PM
பீதர்:
பூணுாலை அகற்ற மறுத்ததால், பொது நுழைவுத் தேர்வு எழுத மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் இன்ஜினியரிங் உட்பட தொழில்நுட்பப் படிப்புக்கான, பொது நுழைவுத் தேர்வு கடந்த 16ம் தேதி நடந்தது. வடமாவட்டமான பீதர் டவுன் மன்னாலி சாலையில், சாய் ஸ்பூர்த்தி கல்லுாரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுதுவதற்காக சுசிவ்ரித் குல்கர்னி என்ற மாணவர் வந்தார். அவரை தேர்வு மைய கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் பூணுால் அணிந்து இருந்ததை கவனித்தனர். பூணுாலை அகற்றிவிட்டு தான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்று, சுசிவ்ரித் குல்கர்னியிடம் கூறினர்.
சம்பிரதாய முறைப்படி அணிந்துள்ளேன்; பூணுாலை அகற்ற முடியாது, என சுசிவ்ரித் மறுத்துள்ளார். இதனால் அவரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தேர்வு எழுத முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதுபற்றி பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
பாரம்பரியம்
பூணுால் அகற்ற மறுத்ததால், சுசிவ்ரித்தை தேர்வு எழுத அனுமதிக்க அதிகாரிகள் மறுத்த விவகாரம், மாநிலம் முழுதும் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் நடவடிக்கைக்கு கர்நாடக பிரமாண மகாசபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வர் சித்தராமையாவுக்கு, பிரமாண மகாசபை தலைவர் ரகுநாத் கடிதம் எழுதி உள்ளார். போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
தேர்வு எழுத முடியாதது பற்றி சுசிவ்ரித் கூறுகையில், பூணுாலை அகற்றிவிட்டு வந்தால் மட்டுமே, தேர்வு எழுத அனுமதிப்போம் என்று தேர்வு மைய அதிகாரிகள், மூன்று போலீஸ்காரர்கள் கூறினர். எங்கள் பிராமண பாரம்பரியத்தில் பூணுால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அகற்ற முடியாது என்றேன். இதனால் என்னை வெளியே அனுப்பிவிட்டனர் என்றனர்.
நியாயம் வேண்டும்
சுசிவ்ரித் தாய் நீதா குல்கர்னி கூறுகையில், என் மகன் எதிர்காலத்துடன், தேர்வு மைய அதிகாரிகள் விளையாடி உள்ளனர். பொது நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்று, இன்ஜினியரிங் படிப்பில் சேர வேண்டும் என்பது சுசிவ்ரித்துக்கு ஆசையாக இருந்தது. பூணுாலை அகற்ற மறுத்ததற்காக தேர்வு எழுத அனுமதிக்காதது சரியல்ல. எங்களுக்கு நியாயம் வேண்டும். எந்த அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதி மறுத்தனரோ, அவர்களே இன்ஜினியரிங் கல்லுாரியில் சீட் வாங்கிக் கொடுக்க வேண்டும், என்றார்.
போராட்டம்
இந்த பிரச்னை ஒரு பக்கம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஷிவமொக்காவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது தெரிய வந்தது. ஷிவமொக்காவின் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் அபிஜ்னா. பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவரும், நேற்று முன்தினம் பொது நுழைவுத் தேர்வு எழுதினார். ஷிவமொக்கா டவுன் ஆதிசுஞ்சனகிரியில் அவருக்கு, தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அபிஜ்னா கையில் கட்டி இருந்த காசி கயிறை, தேர்வு மைய அதிகாரிகள் அகற்றி குப்பை தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பிராமண சமூகத்தினர் ஷிவமொக்காவில் நேற்று போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர்.
இந்த சம்பவங்களுக்கு எதிராக, ஹிந்து அமைப்பினரும் குரல் கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு அறைக்கு செல்லக் கூடாது என்று சொல்ல தைரியம் இல்லாதவர்கள், பூணுாலை அகற்ற முயற்சி செய்கின்றனர். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டும் என, ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
விஜயேந்திரா, தலைவர், கர்நாடக பா.ஜ.,: பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவரை, பூணுாலை அகற்றும்படி அதிகாரிகள் கூறி உள்ளனர். அவர்களுக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது? பள்ளி கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டத்தில், மாணவர் கையில் கட்டப்பட்டு இருந்த காசி கயிறை அகற்றியது கண்டிக்கத்தக்கது. இந்த இரண்டு சம்பவங்களும் அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

