ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஹோட்டல் படிப்பு: தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஹோட்டல் படிப்பு: தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்
UPDATED : பிப் 27, 2026 02:19 PM
ADDED : பிப் 27, 2026 02:22 PM
நாமக்கல்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் ஹோட்டல் மேலாண்மை படிக்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில், 3 ஆண்டு முழு நேர பி.எஸ்.சி., ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான சேர்க்கை நடக்கிறது. இந்நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும்.
இது உலக அளவில் சிறந்த ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில், 13வது இடத்தை பிடித்துள்ளது. இதில் சேர விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில், 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு மார்ச், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வழி தேர்வு ஏப்., 25ம் தேதி நடக்கும். மொத்த படிப்பு செலவையும் தாட்கோ நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் திறமை அடிப்படையில் நட்சத்திர ஹோட்டல்கள், விமானத்துறை, கப்பல்துறை மற்றும் பெரிய உணவகங்களில் வேலை கிடைக்கும்.
ஆரம்ப சம்பளமாக, 25 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரையும், பின்னர் பதவி உயர்வு மற்றும் திறமை அடிப்படையில், 50 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய் வரையும் சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க http://exams.nta.nic.in/nchm.jee என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் தாட்கோ மூலம் பயில www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விபரம் பெற, நாமக்கல் கலெக்டர் ஆபீசில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286 - 291178, , 9445029508 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

