UPDATED : ஜூன் 26, 2026 04:24 PM
ADDED : ஜூன் 26, 2026 04:26 PM
மதுரை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தாட்கோ, மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் நான்கு மாத நெகிழி செயலாக்க இயந்திர இயக்குனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சி சென்னையில் நடைபெறும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
இதில் தேர்ச்சி பெறும் இளைஞர்களுக்கு பயிற்சி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்க வழிசெய்யப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு இணையதளம் (www.tahdco.com) மூலம் பதிவு செய்யலாம்.
