60,000 மாணவர்களுக்கு பொலிவு பராமரிப்பு 'கிட்' வழங்குகிறது தாட்கோ
60,000 மாணவர்களுக்கு பொலிவு பராமரிப்பு 'கிட்' வழங்குகிறது தாட்கோ
UPDATED : செப் 08, 2025 12:00 AM
ADDED : செப் 08, 2025 05:05 PM
சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூக நீதி விடுதி மாணவர்கள் 60,000 பேருக்கு, சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய பொலிவு பராமரிப்பு 'கிட்' வழங்க, தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகமான தாட்கோ முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,338 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகள் உள்ளன.
இவற்றில் தங்கி படிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, முடி திருத்தும் கூலி, சோப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மாதம் 100, 150 ரூபாய் முறையே, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டன.
இத்தொகைக்கு மாற்றாக, கடந்த பிப்ரவரி மாதம், தாட்கோ சார்பில், நான்கு குளியல் சோப்பு, 200 மி.லி., தேங்காய் எண்ணெய், ஷாம்பு, இரண்டு துணி துவைக்கும் சோப்பு உட்பட, ஏழு பொருட்கள் அடங்கிய பொலிவு பராமரிப்பு 'கிட்' வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக, ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும், 170 கல்லுாரி விடுதி மாணவ - மாணவியர் விடுதிகளுக்கு, 'கிட்' வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 1,388 சமூக நீதி விடுதியில் படிக்கும் 60,000 மாணவர்களுக்கு, பொலிவு பராமரிப்பு 'கிட்' வழங்க தாட்கோ முன் வந்துஉள்ளது. இந்த கிட், ஆண்டுக்கு மூன்று முறை மாணவர்களுக்கு வழங்கப்படும் என, தாட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.