டயட்டில் தமிழி கல்வெட்டு எழுத்து பயிற்சி: 110 தன்னார்வலர் பங்கேற்பு
டயட்டில் தமிழி கல்வெட்டு எழுத்து பயிற்சி: 110 தன்னார்வலர் பங்கேற்பு
UPDATED : ஆக 03, 2026 03:01 PM
ADDED : ஆக 03, 2026 03:03 PM
நாமக்கல்:
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மெட்ரோ அரிமா சங்கம் சார்பில், 'தமிழி' கல்வெட்டு எழுத்து பயிற்சி முகாம், நாமக்கல்லில் நடந்தது.
நாமக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்க தலைவர் ரமேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசுகையில், “தமிழி அல்லது தமிழி பிராமி எழுத்துக்கள், தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் அரிய சான்றுகள்.
இவற்றை கற்பதன் மூலம், கல்வெட்டுகளை இடைத்தரகர்களின்றி வாசிக்கும் திறன் உருவாகும். மேலும், ஆசிரியர்கள் வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆய்வில் ஈடுபடவும் இது உதவும்,” என்றார்.
மலர் ஹோமியோபதி மருத்துவ மைய டாக்டர் எழில்செல்வன், 'தமிழி' கல்வெட்டு எழுத்து பயிற்சி நுாலை வெளியிட்டு, “இப்பயிற்சியின் மூலம், புதிய தமிழி கல்வெட்டுகளை அடையாளம் காணும் வாய்ப்பு உருவாகும்,” என்றார்.
கொல்லிமலை நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சந்திரசேகரன், கருத்தாளராக இருந்து, 'தமிழி' எழுத்துக்களின் அறிமுகம், உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளை எழுதுதல், வாசித்தல் குறித்து பயிற்சியளித்தார். நாமகிரிப்பேட்டை வேலம்பாளையம் பஞ்., நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சிவராமன், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்கள், கல்திட்டைகள் மற்றும் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
மெட்ரோ லயன்ஸ் சங்க நிர்வாக செயலாளர் சுந்தரராஜன், சேவை திட்ட செயலாளர் சதீஸ்குமார், பொருளாளர் பழனிசாமி, 110 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
