UPDATED : செப் 24, 2025 10:34 AM
ADDED : செப் 24, 2025 10:35 AM
சென்னை:
அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற விழா, சென்னையில் நாளை (செப்.,25) நடக்கிறது என அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு அதிகாரி அமுதா கூறினார்.
அவர் கூறியதாவது:
வரும் 25ம் தேதி, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற, தமிழகத்தின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டம் நடக்கவுள்ளது. இந்த முக்கியமான நிகழ்வில், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடக்கிறது. 4 மணி நேரம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், 'நான் முதல்வன், முதல்வரின் காலை உணவு திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன்' திட்ட பயனாளிகள், விளையாட்டு சாதனையாளர்கள், சிறப்பு குழந்தை சாதனையாளர்கள் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தெலுங்கானா முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்திற்கு நடப்பாண்டு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதும், இந்த நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, 2.57 லட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறவுள்ளனர்.
இவ்வாறு அமுதா கூறினார்.