UPDATED : பிப் 04, 2026 09:21 AM
ADDED : பிப் 04, 2026 09:36 AM

அறிவுச் சுரங்கங்களாகத் திகழும் நூலகங்களை நவீன காலத்திற்கு ஏற்ப தரம் உயர்த்தும் நோக்கில், தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களுக்கு மத்திய அரசு முக்கிய நிதியுதவியை வழங்கியுள்ளது.
அடிப்படை வசதிகள்
நூலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குச் சிரமமில்லாத வாசிப்பு அனுபவத்தை வழங்கவும் அடிப்படை வசதிகள் அவசியம்.
இதனால், ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 668 நூலகங்களுக்கு மேஜைகள், நாற்காலிகள் மற்றும் புத்தக அலமாரிகள் வாங்குவதற்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 96 ஆயிரத்து 132 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 401 நூலகங்களை நவீனமயமாக்க ரூ.1 கோடியே 68 லட்சத்து 94 ஆயிரத்து 334 வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நூலகம்
மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை இளம் வயதிலேயே விதைக்கும் நோக்கில் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் மற்றும் வாசிப்பு மையம் அமைக்க ஒரு நூலகத்திற்கு ரூ.1,44,576 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நூலகங்களில் அறிவு மையம் நிறுவுவதற்கு ரூ.48,812 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
நிதி விடுவிப்பு
மேலும், வேலூர் மாவட்ட நூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.87 லட்சத்தில், ரூ.79.27 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி மாவட்ட நூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.70 லட்சத்தில், ரூ.68.16 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயம்
புத்தகங்களை வெறும் காகித வடிவில் மட்டுமல்லாமல், டிஜிட்டல் முறையில் பாதுகாக்கவும், இணைய சேவைகளை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து, நூலகங்களில் கணினிகள், ஸ்கேனர்கள், வை ஃபை வசதிகள் மற்றும் இதர தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை ஏற்படுத்த நிதி வழங்கப்படுகிறது.
மேலும், நூலகங்களை நிர்வகிக்கும் ஊழியர்களுக்கு 'இ-ஆதாரங்கள்' மற்றும் இணையதள சேவைகளை வழங்குவது குறித்து சிறப்புப் பயிற்சிகள், பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
புதிய நூலகங்களைத் திறப்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், இருக்கும் நூலகங்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதில் மத்திய அரசின் இந்த நிதியுதவி பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

